இராக்கில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானம்! 4 பேர் பலி!
இராக்கில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானம் குறித்து...
இராக்கில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானத்தில் பயணித்த பணியாளர்கள் 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளின் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணியில் அமெரிக்க ராணுவத்தின் கேசி-135 எனும் விமானம் ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில், கேசி-135 விமானம் இராக்கின் மேற்கு மாகாணத்தில் வியாழக்கிழமை (மார்ச் 12) விழுந்து நொறுங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்தில், அந்த விமானத்தில் பயணித்த 6 பணியாளர்களில் 4 பேர் பலியானதாகவும், அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த விமானம் தாக்குதலில் வீழ்த்தப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, நடுவானில் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் திறன்வாய்ந்த கேசி-135 ரக விமானங்கள் போயிங் 707 பயணிகள் விமானத்தின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டவை.
மேலும், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கேசி-135 எரிபொருள் நிரப்பும் விமானங்கள் அமெரிக்க விமானப் படையில் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.