நாட்டில் புதிய வகை கரோனா பாதிப்பு 82 ஆக உயர்வு
நாட்டில் புதிதாக பரவி வரும் அதிதீவிர கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
புது தில்லி: நாட்டில் புதிதாக பரவி வரும் உருமாறிய கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
ஜனவரி 6-ஆம் தேதி வரை புதிய வகை கரோனா பாதிப்பு 73 ஆக இருந்த நிலையில் தற்போது இது 82 ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஒன்பது பேருக்கு புதிய வகை கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 82 ஆக அதிகரித்துள்ளது.
புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாநில அரசுகளால் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.
பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா, இந்தியாவைப் போன்றே டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஸ்வீடன், பிரான்ஸ், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, கனடா, ஜப்பான், லெபனான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.