கேரள சட்டப்பேரவைக் கூட்டம்: காங்கிரஸ் வெளிநடப்பு
வெள்ளிக்கிழமை தொடங்கிய கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளும் இடது முன்னணி அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்தது.
வெள்ளிக்கிழமை தொடங்கிய கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளும் இடது முன்னணி அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்தது.
கேரள சட்டப்பேரவையின் 22ஆவது பேரவைக் கூட்டம் இன்று (ஜனவரி 8) தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் உரையாற்றினார்.
அப்போது ஆளும் இடது முன்னணி அரசைக் கண்டித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது. கேரளத்தில் நடப்பாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இடதுமுன்னணி அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஊழல் புகார்களை தெரிவித்து வருகின்றன.
கேரளத் தங்கக் கடத்தல் வழக்கு உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, “இது ஊழல் மிகுந்த அரசு” எனக் குற்றம்சாட்டினார்.
ஜனவரி 15ஆம் தேதி மாநில நிதியமைச்சர் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் மீதான விவாதத்தைத் தொடர்ந்து ஜனவரி 28ஆம் தேதி சட்டப்பேரவை அமர்வு நிறைவு பெறுகிறது.