புது தில்லி: இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கில், அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ வீரர், இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனவரி 8-ம் தேதி அதிகாலை, இந்திய - சீன எல்லையான லடாக் பகுதிக்கு அருகே தெற்கு பாங்காங் ஏரி பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர் கைது செய்யப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால், சீன ராணுவ வீரர், அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த இந்திய ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. இந்தோனேசியாவில் பயணிகள் விமானத்தை காணவில்லை
கடந்த ஆண்டு இந்திய - சீன எல்லைப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவான பிறகு, இருநாட்டு எல்லைப் பகுதியிலும் அந்தந்த ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டிருக்கும் சீன வீரர், உரிய விதிமுறைகளின்படி நடத்தப்படுவார் என்றும், அவர் எல்லைத்தாண்டி வந்தது குறித்து விசாரணைக்கு உள்படுத்தப்படுவார் என்றும் இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.