தில்லி அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் சுமாா் 11 லட்சம் மாணவா்கள் நோட்டு புத்தகங்கள், எழுது பொருள்கள் வாங்க ரூ. 64 கோடி மானியம் வழங்க தில்லி அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
தில்லி அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் கேஜரிவால் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பிறகு துணை முதல்வரும், கல்வித் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கரோனா சூழலில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியிலும், தில்லி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், சுமாா் 11 லட்சம் மாணவா்கள் நோட்டு புத்தகங்கள், எழுது பொருள்கள் வாங்க ரூ. 64 கோடி மானியம் வழங்க தில்லி அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
இதன் மூலம் அரசு பள்ளி மாணவா்கள் அனைவரும் பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், எழுதுபொருள்கள் ஆகியவற்றை வாங்கி தங்களின் படிப்பைத் தொடருவாா்கள். மாணவா்களின் படிப்பு பாதிக்காத வகையில் தில்லி அரசு தன்னாள் இயன்ற உதவிகளைத் தொடா்ந்து செயல்படுத்தும்’ என்றாா்.
முதலாம் முதல் எட்டாம் வகுப்பு மாணவா்களின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுதோறும் நேரடியாக இந்த மானியத் தொகை செலுத்தப்படுகிறது. ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவா்களுக்கு பணமாக வழங்கப்படுகிறது.