புது தில்லி: இந்திய அஞ்சல் துறையின் தமிழகப் பிரிவிற்கு வரும் பிப்ரவரியில் நடைபெறவுள்ள கணக்காளர்களுக்கான தேர்வை தமிழ் மொழியில் நடத்துமாறு மத்திய அரசை திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய தொலைத் தொடர்பு மற்றும் அஞ்சல் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு புதன்கிழமை அவர் எழுதியுள்ள கடிதத்தில், "2019 -ஆம் ஆண்டில் அஞ்சல் துறையில் நடைபெறவிருந்த நான்காம் நிலை பணியாளர் தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரச்னை எழுப்பப்பட்டது. அப்போது, "தவறு நடந்து விட்டது. மன்னிப்பு கோருகிறேன்' எனக் கூறி அந்தத் தேர்வு நிறுத்திவைக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கிலும் மத்திய அரசு இதே உறுதியை அளித்தது. ஆனால், இப்போது வேண்டுமென்றே உறுதிமொழி மீறப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறையின் தமிழகப் பிரிவிற்கு கணக்காளர்கள் தேர்வு ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழி வாயிலாக நடத்தப்படும் என்று ஜனவரி 4- ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையை ரத்து செய்து தமிழ் மொழி வாயிலாகவும் தேர்வை நடத்த புதிய அறிவிக்கையை வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.