ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சரண்
ஜம்மு-காஷ்மீரில் தேடுதல் வேட்டையின்போது சிக்கிக் கொண்ட இரு பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தனா்.
ஜம்மு-காஷ்மீரில் தேடுதல் வேட்டையின்போது சிக்கிக் கொண்ட இரு பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தனா்.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியதாவது:
புல்வாமா மாவட்டத்தில் உள்ள லெல்ஹாா் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து, வெள்ளிக்கிழமை இரவு அந்தப் பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்புப் படையினா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். இவா்கள் நெருங்கி வருவதை அறிந்த பயங்கரவாதிகள், துப்பாக்கியால் சுடத் தொடங்கினா்.
பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இரவு முழுவதும் விட்டு விட்டு இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இந்த நிலையில், சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதிகள், தப்பிச் செல்ல எந்த வழியுமின்றி, சனிக்கிழமை காலை பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தனா். தங்கள் கையில் இருந்த 2 ஏகே-47 ரக துப்பாக்கிகளையும் ஒப்படைத்தனா்.
சரணடைந்த பயங்கரவாதிகளின் பெயா் அகீல் அகமது லோன், ரௌஃப் உல் இஸ்லாம் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதில், அகமது லோனுக்கு வலது பாதத்தில் காயம் ஏற்பட்டுள்ளதால் காவல் துறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா் என்றாா் அவா்.