அதிகமானோரால் பார்க்கப்பட்ட ராகுல் காந்தியின் 'காளான் பிரியாணி' விடியோ
தமிழக கிராம மக்களுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காளான் பிரியாணி செய்யும் விடியோ அதிகம் பேரால் பார்வையிடப்பட்ட விடியோவாக மாறியுள்ளது.
சென்னை: தமிழக கிராம மக்களுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காளான் பிரியாணி செய்யும் விடியோ அதிகம் பேரால் பார்வையிடப்பட்ட விடியோவாக மாறியுள்ளது.
கிராமத்து சமையல்களை விடியோவாக்கி வெளியிடும் வில்லேஜ் குக்கிங், யூடியூப் சேனலில் பதிவேற்றிய இந்த நிகழ்ச்சி, ஒரே நாளில் 35.40 லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, தமிழகத்தைச் சேர்ந்த கிராமத்து மக்களுடன் இணைந்து காளான் பிரியாணியும், தயிர் மற்றும் வெங்காயம் இணைந்து செய்யும் ரைத்தாவையும் செய்து மக்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் விடியோ நேற்று யூடியூப்பில் வெளியானது.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வந்திருக்கும் ராகுல் காந்தி, இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தது தமிழக மக்களிடையே அதிக கவனம் பெற்றது. இவருடன் கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மற்றும் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அந்த விடியோவில், ரைத்தா செய்வதற்காக வெங்காயத்தையும், தயிரையும் சேர்த்து நன்கு கலக்கிவிட்டு, அதனை ருசி பார்த்து தனக்கும் சமையல் திறமை இருப்பதாக சொல்லிப் பெருமை கொள்கிறார் ராகுல் காந்தி.
காளான் பிரியாணியை, தரையில் அமர்ந்தவாறு, இலையில் வைத்து சாப்பிட்டுக் கொண்டே, ராகுல் காந்தி, ரொம்ப நல்லா இருக்கு என்று தமிழில் சொன்னதும், அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும், எனக்கு இந்த உணவு மிகவும் பிடித்திருந்ததாகவும், ராகுல் காந்தி சொல்லிவிட்டு, கிராமத்து சமையல் கலைஞர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார்.