'மாதந்தோறும் 100 யூனிட் மின்சாரம் இலவசம்': எங்கு தெரியுமா?
உத்தரகண்ட் மாநிலத்தில், வீட்டு உபயோகத்துக்கு மாதந்தோறும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று மாநில மின்துறை அமைச்சர் ஹரக் சிங் ராவத் அறிவித்துள்ளார்.
டேஹ்ராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில், வீட்டு உபயோகத்துக்கு மாதந்தோறும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று மாநில மின்துறை அமைச்சர் ஹரக் சிங் ராவத் அறிவித்துள்ளார்.
மின்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு மின்துறை அமைச்சர் ராவத் கூறுகையில், மாநிலத்தில் சுமார் 13 லட்சம் மின் நுகர்வோர் இந்த திட்டத்தின் கீழ் பயனடைவார்கள். அதன்படி, 100 யூனிட்டுக்குள் மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு இலவசமாகவே மின்சாரம் வழங்கப்படும். கட்டணம் ஏதுமில்லை. 101 முதல் 200 யூனிட் பயன்படுத்துவோர், அதில் 50 சதவீத கட்டணச் சலுகையைப் பெறலாம் என்று அறிவித்துள்ளார்.
மாநிலத்தின் கிராமப் பகுதிகளில் வசிப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்டிலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யப்படுகிறது. அந்த வகையில், ஒரு வீட்டில் 2 மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டால், அவர்களுக்கு கட்டணம் ஏதுமில்லை.
அதுபோல, பால் தொழில், விவசாயம் போன்றவற்றுக்கான மின்சார பயன்பாடுகள் இதுவரை வணிகப் பிரிவில் இருந்தது. இனி இதுவும் வீட்டு உபயோகப் பிரிவின் கீழ் கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.