சித்துவை எதிர்க்கும் அமரீந்தர்.. அதிகார போட்டியை முடிவுக்கு கொண்டு வருமா புதிய திட்டம்?
அடுத்த தலைவராக சித்துவை நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு அமரீந்தர் அதிருப்தி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்த தலைவராக சித்துவை நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு அமரீந்தர் அதிருப்தி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே, பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் கருத்து வேறுபாடு நிலவிவந்தது. அமரிந்தரின் நடவடிக்கைகளை சித்து வெளிப்படையாகவே எதிர்த்து பேசி விமரிசித்துவந்தார்.
சித்துவுக்கு ஆதரவாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளதாகக் கூறப்பட்டது. அதேபோல், அமரீந்தருக்கு ஆதரவாக சோனியா காந்தி இருப்பதாக செய்திகள் வெளியாகின.
அமைச்சர் பதவியிலிருந்து விலகிய சித்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக ஆக்கப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், சித்துவை தலைவராக நியமிக்க அமரிந்தர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இருவரையும் சமாதானம் செய்யும் வகையிலேயே காங்கிரஸ் தலைமை சித்துவை தலைவராக்க முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைமை எடுத்த முடிவின்படி, சீக்கியர்கள் பெரும்பான்மையாக வாழும் பஞ்சாபில் இந்து மதத்தை சேர்ந்த ஒருவரையும் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரையும் செயல் தலைவர்களாக ஆக்க முடிவெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால் கட்சியின் பரப்புரை குழு தலைவராக முதலமைச்சர் அமரீந்தர் சிங்கை நியமிக்கவும் திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியானது. சித்துவை தலைவராக நியமித்தால் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அமரீந்தர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொடர் குழப்பம் நீடித்துவரும் நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சித்து, பொதுச் செயலாளர் ஹரிஷ் ராவத் ஆகியோர் இன்று (வெள்ளிக்கிழமை) சந்திக்கவுள்ளனர்.