முகப்பு
இந்தியா

ஜூலை இறுதியில் எடியூரப்பா பதவி விலகல்?

கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா இந்த மாத இறுதியில் விலகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 18 ஜூலை, 2021 at 2:35 PM
கோப்புப்படம்
பகிர்:


கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா இந்த மாத இறுதியில் விலகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவருமான எடியூரப்பாவுக்கு எதிராக சொந்த கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களே போர்கொடி தூக்கியது கடந்த சில நாள்களாக பரபரப்பைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா கட்சியிலும் ஆட்சியிலும் தலையிட்டுவருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதனைத் தொடர்ந்து, அவர் முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் எனத் தகவல் வெளியானது.  

இதனிடையே, எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருந்தார். பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா ராஜிநாமா குறித்து வெளியான செய்திகளில் உண்மையில் இல்லை எனத் தெரிவித்தார்.

Advertisement

இந்நிலையில், இந்த மாத இறுதியில் முதல்வர் பதவியை அவர் ராஜிநாமா செய்வது உறுதியாகியுள்ளதாகத் தெரிகிறது. தில்லியிலிருந்து பெங்களூருவுக்கு சென்ற எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசியபோது, "தற்போதைக்கு, முதல்வர் பதவியில் தொடரும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டார்.

ஆட்சியல் இரண்டு ஆண்டுகள் வரை தொடர மத்திய தலைமை அனுமதித்துள்ளதாகவும் அது ஜூலையுடன் முடியவுள்ளதால் உடல்நிலையை காரணம்காட்டி அவர் ராஜிநாமா செய்வார் என கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

மூத்த தலைவர்களுடன் பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில் தனது மகன்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தர தலைமை உறுதி அளித்ததைத் தொடர்ந்து ராஜிநாமா செய்ய அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், ஆந்திரத்தின் ஆளுநராக அவரை நியமிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பரபரப்பான அரசியல் சூழலில், அடுத்த கர்நாடக முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.