"கலாசார வரலாற்று ஆய்வுக் குழு பன்முகத்தன்மையுடன் மாற்றியமைக்கப்படும்'
நாட்டின் கலாசார பண்பாட்டின் தோற்றம், பரிணாமம் குறித்த வரலாற்றை ஆய்வு செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட்ட 16 பேர் கொண்ட குழு பன்முகத்தன்மையுடன் மாற்றியமைக்கப்படும்
நாட்டின் கலாசார பண்பாட்டின் தோற்றம், பரிணாமம் குறித்த வரலாற்றை ஆய்வு செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட்ட 16 பேர் கொண்ட குழு பன்முகத்தன்மையுடன் மாற்றியமைக்கப்படும் என மத்திய கலாசாரத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 12,000 ஆண்டு கால பண்பாட்டின் தோற்றம், பரிணாமம் குறித்த வரலாற்றை ஆய்வு செய்ய மத்திய அரசால் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதில், சில சமூகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் பல முறை புகார்கள் எழுப்பப்பட்டன. இந்தக் குழுவில் தென்னிந்தியர்கள், செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழ் ஆய்வாளர்கள் இல்லை என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்குழுவை கலைக்குமாறு குடியரசுத் தலைவருக்கு கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளை உள்ளடக்கி இந்தக் குழு மறு சீரமைப்பு செய்யப்படவுள்ளதாக அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.