புதுச்சேரியில் விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் ஆளுநர் வலியுறுத்தல்
புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு, மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு, மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அவர்களை, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (பொ) தமிழிசை சௌந்தரராஜன், சனிக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
புதிய அமைச்சராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த அவர், புதுச்சேரியில் கரோனா காரணமாக நிறுத்தப்பட்ட விமான போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இரவு நேரங்களில் விமானங்கள் இறங்குவதற்கு வசதியாக, விமான ஓடுதளம் பாதையை விரிவுபடுத்த வேண்டும்.
ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக, காரைக்கால் கோயில் நகரத்தை உதான் திட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும். தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் பயன்பெறும் வகையில், சர்வதேச விமானங்கள் வந்து செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து, ஆலோசனை நடத்தினார்.
விரைவில் இதற்கான நடவடிக்கை எடுப்பதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.