ஆறு வயது இரட்டையர்களைக் கொன்ற 5 பேருக்கு இரட்டை ஆயுள்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆறு வயது இரட்டைச் சகோதரர்களை பணத்துக்காகக் கடத்திக் கொன்ற ஐந்து பேருக்கு அடுத்தடுத்து அனுபவிக்கும் வகையில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சத்னா: மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆறு வயது இரட்டைச் சகோதரர்களை பணத்துக்காகக் கடத்திக் கொன்ற ஐந்து பேருக்கு அடுத்தடுத்து அனுபவிக்கும் வகையில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இரட்டையர்கள் கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வந்த சத்னா நீதிமன்றம், குற்றவாளிகள் ஐந்து பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்ததோடு, ஒரு ஆயுள் தண்டனை முடிந்ததும், அடுத்த ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த எண்ணெய் வியாபாரி பிரிஜேஷ் ராவத்தின் இரட்டைக் குழந்தைகளான ஷ்ரேயான்ஷ், பிரியான்ஷ் ஆகியோர் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சித்ரகூட்டில் உள்ள பள்ளியிலிருந்து துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டனர்.
குழந்தைகளைக் கடத்திச் சென்று ரூ.1 கோடி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். உடனடியாக குற்றவாளிகளுக்கு ரூ.20 லட்சம் கொடுத்த நிலையில், குழந்தைகளைக் கொலை செய்த குற்றவாளிகள், உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டா பகுதிக்கு அருகே யமுனா நதியில் உடல்களை வீசினர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.