19.3.1976: தமிழ்நாடு சார்பில் சட்டங்களை இயற்ற ராஷ்டிரபதிக்கு அதிகாரம்
தமிழ்நாடு சார்பில் சட்டங்களை இயற்ற ராஷ்டிரபதிக்கு அதிகாரம்...
புதுடில்லி, மார்ச்: 18- தமிழ்நாட்டின் சார்பில் சட்டங்கள் இயற்றும் அதிகாரங்களை 'ராஷ்டிரபதிக்கு வழங்கும் மசோதா இன்று லோக்சபையில் நிறைவேற்றப்பட்டது.
சட்டமியற்றும் விஷயத்தில் ராஷ்டிரபதிக்கு ஆலோசனைகள் கூறுவதற்காக, 40 லோக்சபை மெம்பர்களும், 20 ராஜ்யசபை மெம்பர்களும் கொண்ட ஒரு கமிட்டியும் நியமிக்கப்படும்.
மசோதாவின் மீது நடந்த விவாதத்திற்கு உள்நாட்டிலாகா உதவி மந்திரி மோசின் பதிலளிக்கையில், ராஷ்டிரபதி ஆட்சி அமலாக்கப்படும் போதெல்லாம் இம்மாதிரி அதிகாரங்களை அளிப்பது வழக்கம் என்றும் கூறினார். தமிழ்நாடு சம்பந்தப்பட்ட சட்ட நடவடிக் கைகள் அனைத்தையும் கவனிக்க பார்லிமெண்டுக்கு அவகாசம் இல்லாமல் போகலாம் என்றும் அவர் கூறினார்.
பார்லிமெண்டின் நேரம் குறைவாக இருப்பது பற்றி அவர் குறிப்பிட்டார். குஜராத், தமிழ் நாடு, பாண்டிச்சேரி, நாகாலாந்து ஆகியவை அனைத்தும் ராஷ்டிரபதியின் ஆட்சியின் கீழ் இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார். இந்த மாநிலங்கள் சம்பந்தமாக பல சட்டங்கள் இயற்ற வேண்டிய அவசியத்தை 20 அம்சத் திட்டம் ஏற்படுத்தி உள்ளது என்றும், பார்லிமெண்ட் கூட்டத் தொடர் நடைபெறாத நேரத்தில் சட்டமியற்ற வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்றும் அவர் சொன்னார்.
தமிழ்நாட்டில் ராஷ்டிரபதி ஆட்சி அமல் செய்யத் தொடங்கியதிலிருந்து மக்களில் ஏழை பிரிவினரின் நலனுக்காக வெளியிடப்பட்ட பல்வேறு அவசரச் சட்டங்களுக்குப் பதிலாக அவசியமான சட்டங்களை ஏப்ரல் 17-ந் தேதிக்கு முன்பாக ராஷ்டிரபதி நிறைவேற்றிட இந்த மசோதா வகை செய்யும் என்று அவர் கூறினார்.
சட்டங்களை விரைவாக இயற்ற வேண்டியிருப்பதால், தமிழ்நாடு பற்றிய ஆலோசனைக் கமிட்டிக்கான விரிவான நடைமுறை விதிகளை வகுப்பது சாத்தியமல்ல என்று பி.வி. நாயக்குக்கு (புது காங்) மோசின் கூறினார்.
ராஷ்டிரபதி இயற்றும் சட்டங்களை பார்லிமெண்ட் திருத்தலாம் என்றும், எனவே அதிகாரங்களை ஒப்படைத்தாலும் பார்லிமெண்டின் கட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கிறது என்றும் மோசின் விளக்கினார்.
குடும்பக் கட்டுப்பாடு: கட்டாயமாக்க அரசு அவசரப்படாது
புது டில்லி, மார்ச், 18 - குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை ஊக்குவிப்பதற்கான சலுகைகள், இத் திட்டத்தை தடுப்பதற்கான வழி வகைகள் முதலியவை அடங்கிய பல அம்சத் திட்டத்தை மத்ய அரசு அடுத்த மாதம் அறிவிக்கும். இத் தகவலை மத்ய சுகாதார அமைச்சர் சுரண்சிங் இன்று லோக் சபையில் தெரிவித்தார். இந்தத் திட்டம் பற்றி உயர்மட்டப் பரிசீலனை நடந்து கொண்டு இருப்பதாக அவர் சொன்னார்.
குடும்பத்தின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு கட்டாய திட்ட சட்டம் ஒன்றைக்கொண்டு வரவேண்டும் என்று கூறப்படும் யோசனைகள் குறித்து அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அவர் அறிவித்தார். அவ்வாறு ஏதேனும் முடிவு எடுப்பதற்கு முன்பாக மத்ய சட்ட அமைச்சகத்தைச் சுகாதார அமைச்சகம் கலந்து ஆலோசிக்கும் என்றும் அவர் கூறினார்.