முகப்பு
இந்தியா

பெகாஸஸை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? - ராகுல் சரமாரி கேள்வி

பெகாஸஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
ராகுல் காந்தி
பகிர்:

பெகாஸஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

பெகாஸஸ் மென்பொருள் விவகாரம் உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துவரும் நிலையில், இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் இந்திய நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளது.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் தொடர் அமளி ஏற்பட்டுவருகிறது. இதனிடையே, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "அனைத்து எதிர்க்கட்சிகளும் இங்கு கூடியுள்ளது. நாடாளுமன்றத்தில் எங்களின் குரல் நசுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக பயன்படுத்த பெகாஸஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? என்ற கேள்வியைதான் தொடர்ந்து கேட்கிறோம்.

இதுகுறித்து விவாதம் நடைபெறாது என அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் ஏன் விவாதம் நடத்தப்படக்கூடாது? மோடி எங்களின் தொலைப்பேசிகளில் ஆயுதத்தை புகுத்தி வேவு பார்த்துள்ளார்.

நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் நாங்கள் தடுப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், நாங்கள், எங்களின் கடமைகளையே செய்கிறோம். அவர்களின் குற்றச்சாட்டு ஜனநாயகத்திற்கு எதிரானது" என்றார்.

பின்னர் பேசிய சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், "நாட்டின் பாதுகாப்பு, ஜனநாயகம், விவசாயிகளின் நலன் ஆகியவற்றை காப்பாற்ற ஒன்றிணைந்துள்ளோம். ராகுல் காந்தி விளக்கியது போல், ஜனநாயகத்திற்கு எதிரான அம்புதான் இந்த ஆயுதம். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்" என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →