கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது: வானிலை மையம்
கேரளத்தின் தெற்குப் பகுதியில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புது தில்லி: கேரளத்தின் தெற்குப் பகுதியில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று கேரளத்தில் தொடங்கியிருக்கும் தென்மேற்குப் பருவமழை, தொடர்ந்து 4 நாள்கள் அதாவது செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் இன்று தொடங்கியிருக்கும் தென்மேற்குப் பருவமழை காரணமாக, இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் பயனடையும் என்றும், இந்தியாவுக்கு அதிகப்படியான மழையைக் கொடுப்பது இந்த தென்மேற்குப் பருவமழை என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தென் மேற்குப் பருவமழை கேரளப் பகுதிகளில் இன்று தொடங்கும் என்றும், அதற்கான அனைத்து சாதகமான சூழலும் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை தெரிவித்திருந்தது.
ஜூன் 1-ஆம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்குப் பருவ மழை 2 நாள்கள் தாமதமாக 3ஆம் தேதி தொடங்கியுள்ளது.
தென்மேற்குப் பருவ மழை தொடங்கியிருக்கும் நிலையில், வடகிழக்கு இந்திய மாநிலங்களில் ஜூன் 8 முதல் 10-ஆம் தேதி வரை பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் வானிலை பொதுவாக வறண்டு காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், தென்மேற்குப் பருவமழை தொடா்பான அறிகுறிகள் தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மே 21-ஆம் தேதி தொடங்கியது. இதன்பிறகு, பருவமழை பல்வேறு இடங்களில் படிப்படியாக விரிவடைந்து வந்தது. தற்போது நிலவரப்படி, கேரளப் பகுதிகளில் மேற்கு திசையில் இருந்து காற்று வீசுகிறது. மேலும், கேரள கடலோரப்பகுதி மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மேகக்கூட்டம் காணப்படுகிறது. இதன்மூலம், தென்மேற்குப் பருவமழை கேரளப்பகுதிகளில் வியாழக்கிழமை தொடங்க சாதகமான சூழல் உள்ளது என்று கூறியிருந்தார்.
சராசரி மழை அளவு :
தென் மேற்குப் பருவமழை காலத்தில் கடந்த 1961 முதல் 2010-ஆம் ஆண்டுவரை பதிவான மழை அளவின்படி, ஆண்டுக்கு சராசரி மழை அளவு 88 செ.மீ. ஆகும். இதுவே, தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் பெய்யும் வழக்கமான அளவாக கணக்கிடப்படுகிறது. அதன்படி, நிகழாண்டில் நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை வழக்கமான அளவு பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்னிந்திய பகுதிகளில் மழைஅளவு 93 சதவீதம் முதல் 107 சதவீதம் வரை இருக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.