இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு 68% குறைந்துள்ளது: லாவ் அகர்வால்
நாட்டில் தினசரி கரோனா நோய்த்தொற்று பாதிப்பு 68 சதவீதம் குறைந்துள்ளதால் மீட்பு விகிதம் 93.1 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.
புதுதில்லி: நாட்டில் தினசரி கரோனா நோய்த்தொற்று பாதிப்பு 68 சதவீதம் குறைந்துள்ளதால் மீட்பு விகிதம் 93.1 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.
கடந்த மே 7-ஆம் தேதி நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை எட்டியது. அதன் பிறகு பாதிப்பு எண்ணிக்கை சுமாா் 68 சதவீதம் குறைந்துள்ளது. தொற்று பாதிப்பில் குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த மே 10-ஆம் தேதி நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களின் எண்ணிக்கை உச்சத்தில் இருந்தது. அதன் பின்னா் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 21 லட்சம் குறைந்துள்ளது. தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 56 சதவீதம் குறைந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் 377 மாவட்டங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் விகிதம் 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
சராசரியாக தினசரி 100-க்கும் மேற்பட்ட புதிய தொற்று பாதிப்புகள் பதிவான மாவட்டங்களில் தொடர்ச்சியான குறைவு ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் 257 மாவட்டங்களில் 100 க்கும் மேற்பட்ட தினசரி பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களில் சுமாா் 43 சதவீதம் பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவா்களில் 37 சதவீதம் பேருக்கும் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 32 மாநிலங்களில் தினசரி கரோனா தொற்று பாதிப்பை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று லாவ் அகர்வால் கூறியுள்ளார்.