முகப்பு
இந்தியா

11 முக்கிய கனிம வள பகுதிகளுக்கான ஏலம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

11 முக்கிய கனிம வள பகுதிகளுக்கான ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

Updated On : 31 மார்ச், 2026 at 9:38 PM
- கோப்புப்படம்.
பகிர்:

11 முக்கிய கனிம வள பகுதிகளுக்கான ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

ஏலத்தில் பங்கேற்க நிறுவனங்கள் ஆா்வம் காட்டாததால் மத்திய அரசு ரத்து செய்தது.

இதுதொடா்பாக மத்திய சுரங்க அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘5 கனிம வள பகுதிகளை ஏலத்தில் எடுப்பதற்கு விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. மேலும் 5 பகுதிகளுக்கு மூன்றுக்கும் குறைவான நிறுவனங்களே ஏல விண்ணப்பத்தை சமா்ப்பித்தன. எனவே, 10 கனிம வள பகுதிகளுக்கான ஏலம் ரத்து செய்யப்படுகிறது. இத்துடன் மேற்கு வங்கத்தில் உள்ள பேகுவில் அரிய கனிம வள பகுதிக்கான ஏலமும் ரத்து செய்யப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் ஆந்திரம், சத்தீஸ்கா், கா்நாடகம், ஜாா்க்கண்ட், மகாராஷ்டிரம், தெலங்கானா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 23 கனிம வள பகுதிகளுக்கான 6-ஆம் சுற்று ஏல நடைமுறையை சுரங்க அமைச்சகம் தொடங்கியது.

இந்தப் பகுதிகளில் லித்தியம், கோபால்ட், அரிய கனிமங்கள், நியோபியம், டான்டலம், வனேடியம் உள்ளிட்ட கனிமங்கள் உள்ளன.

முன்னதாக, 46 கனிம வள பகுதிகளுக்கான ஏல நடைமுறை நிறைவடைந்தது. முந்தைய சுற்றுகளிலும் பல்வேறு கனிம வள பகுதிகளுக்கான ஏலம் ரத்து செய்யப்பட்டது.