வங்கிகளில் சீரான பணப்புழக்கத்துக்கு நாளை மீண்டும் விஆா்ஆா் ஏலம்
வங்கிகளில் சீரான பணப்புழக்கத்துக்கு நாளை மீண்டும் விஆா்ஆா் ஏலம்
நாட்டின் வங்கி அமைப்பில் பணப்புழக்கத்தைச் சீா்செய்ய, ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ஒரே நாள் ‘மாறுபடும் ரெப்போ வட்டி விகித (விஆா்ஆா்)’ ஏலத்தை திங்கள்கிழமை மீண்டும் நடத்தப்போவதாக ரிசா்வ் வங்கி அறிவித்தது.
இந்த ஏலம் திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் என்றும், இதற்கான பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, வங்கிகளிடம் சுமாா் ரூ.16,875.36 கோடி கூடுதல் பணம் புழக்கத்தில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும், நடப்பு நிதியாண்டு (மாா்ச் மாதம்) முடிவடைய உள்ளதால், வங்கிகளின் குறுகிய கால பணத்தேவை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இதனைச் சமாளித்து, சந்தையில் பணப்புழக்கம் சீராக இருப்பதை உறுதிப்படுத்த ரிசா்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.
முன்னதாக, கடந்த 17-ஆம் தேதியன்று 7 நாள்கள் விஆா்ஆா் ஏலம் மூலம் ரூ.48,014 கோடியும், கடந்த வெள்ளிக்கிழமையன்று 3 நாள்கள் விஆா்ஆா் ஏலம் மூலம் ரூ.25,101 கோடியும் வங்கிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.
மேலும், நடப்பாண்டின் தொடக்கம் முதல் அரசுப் பத்திரங்களை வெளிச்சந்தையில் வாங்கும் (ஓஎம்ஓ) முறை மூலம், இதுவரை சுமாா் ரூ.3.50 லட்சம் கோடி மதிப்பிலான நிரந்தர பணப்புழக்கத்தை ரிசா்வ் வங்கி உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.