கரோனாவுக்கு எதிராக பொய்யான வெற்றி: மத்திய அரசு மீது பிரியங்கா சாடல்
கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் 2-ம் அலையில் முன்கூட்டியே பொய்யான வெற்றியை அறிவித்துவிட்டதாக மத்திய அரசை காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா வதேரா சனிக்கிழமை கடுமையாக சாடினார்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் 2-ம் அலையில் முன்கூட்டியே பொய்யான வெற்றியை அறிவித்துவிட்டதாக மத்திய அரசை காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா வதேரா சனிக்கிழமை கடுமையாக சாடினார்.
இதுபற்றி அவர் பேசியது:
"ஆக்சிஜன், ஐசியூ, வென்டிலேட்டர் மற்றும் மருத்துவமனை படுக்கைகளுக்கு நாடே கடுமையான பற்றாக்குறையை சந்தித்த நிலையில், கரோனாவுக்கு எதிரான பொய்யான வெற்றி விளம்பரத்தை பிரதமர் மேற்கொள்கிறார். அரசு அதில் கவனம் செலுத்தவே இல்லை.
நாட்டில் 2,27,972 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் இருப்பதாக பிரதமர் கடந்தாண்டு செப்டம்பரில் தெரிவித்தார். ஆனால், அது 36 சதவிகிதம் சரிந்து 1,57,344 ஆகக் குறைந்தது. இதே காலகட்டத்தில் 66,638 ஐசியூ படுக்கைகள் 46 சதவிகிதம் சரிந்து 36,008 ஆகக் குறைந்தது. வென்டிலேட்டர் படுக்கைகள் 28 சதவிகிதம் சரிந்து 33,024-இல் இருந்து 23,618 ஆகக் குறைந்தது.
சுகாதாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கரோனா 2-ம் அலை குறித்து எச்சரிக்கை விடுத்தது. மருத்துவமனை படுக்கைகள், ஆக்சிஜன் கையிருப்பில் கவனம் செலுத்த பரிந்துரைத்தது. ஆனால், அரசின் கவனம் வேறு எங்கோ இருந்தது.
படுக்கைகள் பற்றாக்குறை குறித்து லட்சக்கணக்கான மக்கள் புகார் தெரிவித்து வந்த நேரத்தில் ஆரோக்ய சேது போன்ற செயலிகள் மற்றும் இதர தரவுகள் பயனற்றதாகிவிட்டன. கரோனாவுக்கு எதிரான வெற்றியை அரசு அறிவித்த அதே நேரத்தில்தான், மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள் குறித்து சரியான தரவுகளை ஆரோக்ய சேது செயலியால் தரமுடியவில்லை.
பாஜக அரசு 2014-இல் ஆட்சிக்கு வந்தவுடன், சுகாதாரத்துக்கான பட்ஜெட்டை 20 சதவிகிதம் குறைத்தது. மேலும் புதிதாக 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டன. அதில் ஒன்றுகூட தற்போது செயல்பாட்டில் இல்லை. 2018-இல் ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் குறைவாக இருப்பதை நாடாளுமன்றக் குழு சுட்டிக்காட்டியபோதிலும், அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை.
நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வசதிகளை மேம்படுத்துமாறு நாடாளுமன்றக் குழுக்கள் மற்றும் நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கைகளை மோடி அரசு எதற்காக நிராகரித்தது?" என்றார் பிரியங்கா.