காங்கிரஸிலிருந்து பாஜகவில் இணைந்த ஜிதின் பிரசாதாவை வரவேற்று ஜோதிராதித்ய சிந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், உத்தரப் பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜிதின் பிரசாதா புதன்கிழமை பாஜகவில் இணைந்தார்.
தில்லியில் பாஜக தலைமையகத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அனில் பலுனி முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்தார்.
இதுபற்றி மாநிலங்களவை உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியா செய்தியாளர்களிடம் கூறியது:
"அவர் எனது இளைய சகோதரர் மாதிரி. பாஜகவுக்கு அவரை வரவேற்கிறேன். அவருக்கு எனது வாழ்த்துகளும்."
இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவையில் அவருக்கான பொறுப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்து அவர் பேசுகையில், "பொதுச் சேவைதான் எனக்கு முதன்மையானது. அந்த சித்தாந்தத்தையே தொடர்கிறேன். எனது தந்தை மற்றும் தாத்தாவின் பாதையையே நானும் பின்பற்றுகிறேன். மக்களுக்கு சேவையாற்றுவதே சிந்தியா குடும்பத்தின் மரபு" என்றார்.
ஜோதிராதித்ய சிந்தியா கடந்தாண்டு காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.