புது தில்லி: நாட்டில் இரண்டாம் கரோனா அலை தீவிரமடைந்து பொதுமுடக்கங்கள் காரணமாக தற்போது மெல்ல குறைந்து வரும் நிலையில், குழந்தைகளுக்கான கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
18 வயது மற்றும் அதற்குள்பட்ட குழந்தைகளுக்கான கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் சுகாதார சேவைகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
அதில், ரெம்டெசிவிர் மருந்தின் பயன்பாடு, அங்கீகாரம் பெற்ற மருந்துப் பொருள்களின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் ரெம்டெசிவிர் மற்றும் இதர அங்கீகாரம் பெற்ற மருந்துகள் எதுவும் குழந்தைகளுக்குக் கொடுக்க பரிந்துரைக்கப்படவில்லை. 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ரெம்டெசிவிரின் பயன்பாடு பாதுகாப்பானது என்பது தொடர்பாக எந்த உறுதியான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை.
அறிகுறி இல்லாத அல்லது கரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு ஸ்டீராய்ட் மருந்துகள் கொடுக்கப்படக் கூடாது என்றும், அது உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5 வயது மற்றும் அதற்குள்பட்ட வயதுடைய குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது அவசியமில்லை. அதுபோல 6 முதல் 11 வயதுடைய குழந்தைகள், பெற்றோரின் வழிகாட்டுதலின் அடிப்படையில், முகக்கவசம் அணியலாம். 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் சரியான முறையில், பெற்றோரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் முகக்கவசம் அணியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.