மகாராஷ்டிரத்தில் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 15 தேசிய பேரிடர் மீட்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
தேசிய பேரிடர் மீட்புப் படை இயக்குநர் எஸ்.என். பிரதான் இதனை சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 4 குழுக்கள் ரத்னகிரியிலும், மும்பை, சிந்துதுர்க், பால்கர், ராய்கட், தாணே ஆகிய பகுதிகளில் தலா 2 குழுக்களும், குர்லாவில் ஒரு குழுவும் முகாமிட்டுள்ளன.
கனமழைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, மாநில அரசின் கோரிக்கைக்கு ஏற்ப மேற்கண்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக பிரதான் தெரிவித்துள்ளார். ஒரு தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழுவில் 47 பணியாளர்கள் இருப்பார்கள்.
மும்பை மற்றும் புறநகரில் புதன்கிழமை பெய்த கனமழையால் சாலைகள், தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கின. இதனால் புறநகர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.