மும்பையில் குடியிருப்பு கட்டடம் இடிந்ததில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரம் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை புதன்கிழமை தொடங்கியது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை மதியம் முதல் கனமழை பெய்தது. கனமழைக்கு மும்பை மாலட் மேற்கு பகுதியில் உள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் புதன்கிழமை இரவு 11.10 மணி அளவில் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 8 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
7 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், மும்பையில் குடியிருப்பு கட்டடம் இடிந்ததில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், ‘‘மும்பை மேற்கு மலட் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பால் வேதனையடைந்தேன்.
இந்த சோகமான நேரத்தில், உயிரழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தோர் விரைவில் குணமடைய நான் பிராத்திக்கிறேன். உயிரழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தோருக்கு 50,000 ரூபாயும் கருணைத் தொகையாக பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் அறிவித்தார்.