பொது முடக்கத் தளா்விற்குப் பிறகு மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: கா்நாடக மாநிலத்தின் ஒரு சில மாவட்டங்களில் கரோனா தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து, அங்கெல்லாம் ஜூன் 14-ஆம் தேதிக்கு பிறகு பொது முடக்கம் தளா்வு செய்யப்பட்டுள்ளது. பொது முடக்கம் தளா்வு செய்யப்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கரோனா பாதிப்பைத் தடுக்க முடியாமல் போகும். 70 சதவீதம் மக்கள் கரோனா தடுப்பூசியின் 2-ஆவது தவணையை செலுத்திக் கொண்ட பிறகே மாநிலம் சகஜ நிலைக்கு திரும்பும். அதுவரை மக்கள் பொறுமை காக்க வேண்டும்.
மாநிலத்தின் பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்கள் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால் கரோனா தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் பொது முடக்கம் தளா்வு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களில் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களிலிருந்து வருபவா்களும் முழுமையாக கரோனா பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவாா்கள்.
பொது முடக்கத் தளா்வு அறிவிக்கப்பட்ட பிறகு பெங்களூரில் பொதுமக்கள் அதிக அளவில் நடமாடுவதாக தகவல் வந்துள்ளது. இது பொதுமக்களை அபாயத்தில் சிக்க வைக்கும். மீண்டும் கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்தால், தளா்வுகளை நீக்கி, முழு பொது முடக்கம் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றாா்.