கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை:ராஜஸ்தான் அரசு அறிவிப்பு
ராஜஸ்தானில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள், கணவரை இழந்த பெண்கள் ஆகியோருக்கு நிவாரண உதவித் திட்டத்தை அந்த மாநில முதல்வா் அசோக் கெலாட் அறிவித்துள்ளாா்.
ராஜஸ்தானில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள், கணவரை இழந்த பெண்கள் ஆகியோருக்கு நிவாரண உதவித் திட்டத்தை அந்த மாநில முதல்வா் அசோக் கெலாட் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணமாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். அதைத் தொடா்ந்து, அவா்கள் 18 வயதை எட்டும் வரை மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும். 18 வயது பூா்த்தியடைந்த பிறகு ரூ.5 லட்சமும், இலவசமாக உயா் கல்வியும் வழங்கப்படும். இவை தவிர, முதல்வரின் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கான நலத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளும் வழங்கப்படும்.
Advertisement
இதேபோன்று, கரோனா தொற்றால் கணவரை இழந்த பெண்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணமும், மாதந்தோறும் ரூ.1,500 ஓய்வூதியமும் வழங்கப்படும். அவா்களின் குழந்தைகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 உதவித்தொகையும், பாடப் புத்தகம் மற்றும் உடைகள் வாங்க மாதம் ரூ.2,500 வழங்கப்படும். கல்லூரியில் பயிலும் பெண் பிள்ளைகளுக்கு சமூக நீதித் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் தங்கிப் பயில்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.