பாக். சென்ற ஈரான் குழு! கொல்லப்பட்ட மினாப் பள்ளிக் குழந்தைகளுக்கு விமானத்தில் அஞ்சலி!
பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினரின் விமானத்தில் மினாப் பள்ளிக் குழந்தைகளுக்கு அஞ்சலி...
அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர், அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட மினாப் பள்ளிக் குழந்தைகளுக்குத் தங்களது விமானத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில், கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, பதிலடியாக வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.
இதில், ஈரானின் மினாப் நகரத்தில் அமைந்திருந்த பள்ளிக் கூடத்தின் மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பள்ளிக் குழந்தைகள் உள்பட சுமார் 165 பேர் கொல்லப்பட்டனர்.
Advertisement
இந்தத் தாக்குதலுக்கு, அமெரிக்காதான் காரணம் எனக் கூறி அதற்கான ஆதாரங்களை ஈரான் அரசு வெளியிட்டது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப். 7 அன்று அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 2 வாரங்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. மேலும், பாகிஸ்தான் தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இருதரப்பும் ஒப்புதல் வழங்கின.
இந்த நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்கா மற்றும் ஈரானின் பிரதிநிதிகள் சென்றுள்ளனர்.
இத்துடன், அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட பள்ளிக் குழந்தைகளின் நினைவாக ஈரானின் பிரதிநிதிக் குழுவுக்கு “மினாப் 168” எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்தக் குழுவினர் சென்ற விமானத்தின் காலி இருக்கைகளில் மினாப் குழந்தைகளின் படங்கள் மற்றும் அவர்களின் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதுபற்றி, ஈரான் அரசின் செய்தித்தொடர்பாளர் எம்.பி. காலிபாஃப் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “இந்த விமானப் பயணத்தில் எனது நண்பர்கள், மினாப் 168” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, 10 முக்கிய அம்சங்கள் இடம்பெறும் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ள நிலையில், ஈரான் சார்பில் காலிபாஃப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
முன்னதாக, இந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அமெரிக்க அரசின் தரப்பிலிருந்து அந்நாட்டின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரியும் அவரின் மருமகனுமான ஜராட் குஷ்னர் ஆகியோர் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.