மேற்கு வங்கத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கான கட்டுப்பாடுகளை ஜூலை 1-ம் தேதி வரை நீட்டிப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை அறிவித்தார்.
செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா, கட்டுப்பாடுகள் பற்றி கூறியது:
"கட்டுப்பாடுகள் ஜூலை 1-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகின்றன. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி. அனைத்து அரசு அலுவலகங்களும் 25 சதவிகித பணியாளர்களுடன் செயல்படும்.
தனியார் மற்றும் கார்பிரேட் நிறுவனங்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 25 சதவிகித பணியாளர்களுடன் செயல்படலாம். தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு இ-பாஸ் முறையில் போக்குவரத்து சேவைகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
வணிக வளாகங்களில் உள்ள கடைகள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறலாம். அனைத்துக் கல்வி நிறுவனங்களும் இயங்க தடை தொடரும். அவசரப் பயன்பாடு தவிர்த்து தனிப்பட்ட வாகனங்கள் இயங்க தடை நீடிக்கிறது."
மேற்கு வங்கத்தில் கடந்த மே 16 முதல் கரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.