விஜய் கனவுலகில் இருக்கிறார்; அவருக்கு எந்த புரிதலும் இல்லை: பியூஷ் கோயல் பேட்டி
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் பேட்டி..
தமிழ்நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்று தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தெரிவித்தார்.
சென்னை வந்துள்ள அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி வர வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஊழல் நிறைந்த திமுக அரசை அகற்றி என்டிஏ ஆட்சியமைக்கும்.
வலுவாக உள்ள தேசிய ஜனநாயக் கூட்டணி நிச்சயம் திமுகவை வீழ்த்தும். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி அமையும். பெண்கள், விவசாயிகள் அனைவருக்குமான ஆட்சியை என்டிஏ கூட்டணி அமைக்கும். தமிழ்நாட்டு மக்களின் தலைவிதியையும் எதிர்காலத்தையும் இந்த தேர்தல் தீர்மானிக்கும். எங்கள் கூட்டணியினர் ஒரே குடும்பமாக இருக்கிறோம்.
தமிழ்நாட்டு மக்கள் குறித்தும் தமிழ்நாடு குறித்தும் எதுவும் தெரியாமல் விஜய் பேசுகிறார். அவருக்கு தமிழக மக்களின் கலாசாரம், அரசியல் பற்றிய எந்த புரிதலும் இல்லை. விஜய் ஒரு கனவுலகில் உள்ளார். கடந்த காலத்தில் திரைத்துறையில் இருந்து பலர் அரசியலுக்கு வந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோரைதமிழக மக்கள் நிராகரித்துள்ளனர். விஜய்க்கு ரசிகர்கள் இருக்கலாம், ஆனால் அது வாக்குகளாக மாறாது" என்றார்.
அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திற்குப் பிறகு இந்த 27 இடங்களுக்கான பாஜக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக ஓரிரு நாள்கள் ஆகும் என்று பியூஷ் கோயல் தகவல் தெரிவித்துள்ளார்.