விளையாட்டு வீரர்கள் நடிக்கும் விளம்பரம்! எச்சரிக்கையுடன் செயல்பட பியூஷ் கோயல் அறிவுறுத்தல்!
பொருள்களை விளம்பரப்படுத்தும்போது உள்ள சிக்கல்கள் தொடர்பாக பியூஷ் கோயல் தெரிவித்தது குறித்து...
பொருள்களை விளம்பரப்படுத்தும் போது, விளையாட்டு வீரர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை (ஏப்.28) தெரிவித்துள்ளார்.
தவறான விளம்பரங்கள் நுகர்வோரை ஏமாற்றக்கூடும் என எச்சரித்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விளையாட்டைப் பற்றியும், விளையாட்டு வீரர்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருப்பதால், நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. அது என்னவென்றால், நாம் ஆதரிக்கும் விஷயங்களை மிகவும் கவனமாகச் செய்ய வேண்டும்.
அண்மைக் காலமாகவே, குறிப்பாக ஊட்டச்சத்து மற்றும் புரதச் சத்து மாத்திரைகள் தொடர்பான தீங்கிழைக்கும் தவறான விளம்பரங்கள் நுகர்வோர்களைத் தவறாக வழிநடத்தி வருகின்றன.
Advertisement
ஒரு பொருளைச் சந்தைப்படுத்தும்போதோ, அங்கீகரிக்கும்போதோ மற்றும் சமூக ஊடகங்களில் பரிந்துரைக்கும்போதோ பிரபலங்கள் அல்லது விளையாட்டு வீரர்களிடத்தில் ஒரு முறையான விழிப்புணர்வு இல்லை. இதனால் அவர்கள் பல்வேறு விதமான சிக்கல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஒரு சமூக வலைதள பிரபங்களாகவோ, ஒரு பொருளின் தூதராகவோ, அல்லது ஒரு பொருளை விளம்பரப்படுத்தும்போதோ உங்கள் அனைவரையும் எச்சரிக்கையாக இருக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். பிற்காலத்தில் அது உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தாத வகையில் நடந்து கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தார்.