பிகார் மாநிலத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஜூன் 16 முதல் ஜூன் 22 வரை அடுத்த ஒரு வாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மாலை 5 மணி வரை செயல்படலாம்.
அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகள், சந்தைகள் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். அதேநேரத்தில் இரவு ஊரடங்கு நேரம் மாற்றப்பட்டுள்ளது. இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மற்றபடி, பள்ளிகள் மற்றும் கல்லூரி உள்பட அனைத்து கல்வி நிலையங்களும் அடுத்த உத்தரவு வரும் வரை மூடியிருக்கும். இதர கடைகளும், வணிக வளாகங்களும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிகார் முதல்வர் நிதிஷ் குமார் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவல் குறைந்து வருவதையடுத்து பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.