முகப்பு
இந்தியா

கரோனாவின் கோரத் தாண்டவம்: பெற்றோரை இழந்து பச்சிளம் தம்பியுடன் தவிக்கும் சிறுமி

கரோனாவின் கோர முகத்துக்கு எல்லையே இல்லை. அது நாள்தோறும் பல்வேறு இடங்களில் தனது கோரத் தாண்டவத்தை ஆடிக்கொண்டேயிருக்கிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:24 AM
கரோனாவின் கோரத் தாண்டவம்: பெற்றோரை இழந்து பச்சிளம் தம்பியுடன் தவிக்கும் சிறுமி
பகிர்:


பாலாசோர்: கரோனாவின் கோர முகத்துக்கு எல்லையே இல்லை. அது நாள்தோறும் பல்வேறு இடங்களில் தனது கோரத் தாண்டவத்தை ஆடிக்கொண்டேயிருக்கிறது.

ஒடிசா மாநிலம் பாலாசோர் பகுதியைச் சேர்ந்த சிறுமி கிருஷ்ணாவுக்கு, இந்த கரோனா வைரஸ், மரணத்தை விடவும் கொடிய கொடுமையை நிகழ்த்திவிட்டுச் சென்றுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு வரை மற்ற சிறுமிகளைப் போலத்தான், இவரும் விளையாடி, ஆன்லைனில் கல்வி பயின்று வந்துள்ளார். ஆனால் இதெல்லாம் ஏப்ரல் 9-ஆம் தேதி வரைதான். மருத்துவமனை செவிலியரான அவரது அம்மா ஸ்மிதா, 9 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கரோனா உறுதி செய்யப்பட்டது.

கட்டாக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த 7 நாள்களில் மே 2-ஆம் தேதி ஸ்மிதா கரோனாவுக்கு பலியானார்.

தனது பெண் குழந்தை மற்றும் புதிதாக பிறந்த ஆண் குழந்தையுடன் சொந்த கிராமத்துக்குத் திரும்பினார் ரயில்வே ஊழியரான கமலேஷ். ஆனால் விதி அங்கும் அவர்களை விடவில்லை. ஒரு வாரத்துக்குப் பின் கமலேஷ் கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு 15 நாள்களுக்குப் பின் சிகிச்சைப் பலனின்றி ஜூன் 9-ஆம் தேதி கமலேஷ் உயிரிழந்தார்.

கரோனாவுக்கு பெற்றோரை இழந்து, கையில் பச்சிளம் தம்பியுடன் உறவினர் தெபசிஸ் வீட்டுக்கு வந்துள்ளார் கிருஷ்ணா. கூலித் தொழிலாளியான தெபசிஸ், தனது குடும்பத்தை நடத்தவே வழி தெரியாமல் அவதிப்பட்டு வரும் நிலையில், இந்த குழந்தைகளைப் பராமரிக்க வழி தெரியாமல், அரசின் உதவியைக் கோரியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.