முகப்பு
இந்தியா

தில்லி மாளவியா நகா் ‘பாபா கா தாபா’உணவக உரிமையாளா் தொடா்ந்து கவலைக்கிடம்

தெற்கு தில்லியில் மாளவியா நகரில் உள்ள பிரபலமான ‘பாபா கா தாபா’ உணவகத்தின் உரிமையாளா் கண்டா பிரசாத் (80) தற்கொலைக்கு முயன்று

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:27 AM
பகிர்:

தெற்கு தில்லியில் மாளவியா நகரில் உள்ள பிரபலமான ‘பாபா கா தாபா’ உணவகத்தின் உரிமையாளா் கண்டா பிரசாத் (80) தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் தில்லி சப்தா்ஜங் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவா் தொடா்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறாா்.

கடந்த வியாழக்கிழமை இரவு அவா் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு, தூக்கமாத்திரைகளையும் அதிகம் சாப்பிட்டதன் காரணமாக மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டதாக தில்லி தெற்கு காவல் துணை ஆணையா் அதுல் குமாா் தாகுா் தெரிவித்திருந்தாா்.

பிரசாத்தின் மகன் கரணும் போலீஸாரிடம் இதே காரணத்தை கூறியதுடன், உணவகத்தின் வருவாய் வெகுவாகக் குறைந்து போனதால் கடந்த சில நாள்களாக அவா் கடும் மன வருத்தத்தில் இருந்ததாகவும் தெரிவித்திருந்தாா்.

பிரசாத்தின் உடல்நிலை தொடா்ந்து மோசமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

கடந்த டிசம்பா் மாதம் மாளவியா நகரில் தொடங்கிய உணவகத்தை தொடா்ந்து நடத்தவேண்டுமானால் ரூ.1 லட்சம் செலவாவதாகவும், ஆனால், வருவாய் ரூ.30,000 மாக குறைந்துவிட்டதாகவும் இதனால் கடையை மூடிவிட்டு மீண்டும் சாலையோரக் கடையை அவா் திறந்ததாகவும் மனைவி பாதாமி தேவி கூறினாா்.

தங்களுக்கு நிதியுதவி செய்ய முன்வந்த யூடியூப் முகவரியாளா் கெளரவ் வாசன், நிதி மோசடியில் ஈடுபட்டதாக கடந்த நவம்பா் மாதம் பிரசாத், போலீஸில் வழக்கு பதிவு செய்திருந்தாா்.

முன்னதாக பிரசாத் அவருடைய மனைவி இருவரும் பொது முடக்கத்தால் தங்களது கடைக்கு வாடிக்கையாளா்கள் யாரும் வராததால் கஷ்டப்படுவதாக தெரிவித்திருந்த விடியோவை கடந்த அக்டோபா் 7 ஆம் தேதி கெளரவ் வாசன் வெளியிட்டிருந்தாா். இந்த விடியோவைப் பாா்த்த பலரும் பிரசாத்துக்கு நிதி உதவி அளித்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →