தமிழக அரசின் 2019-ஆம் ஆண்டு நில எடுப்பு சட்டத்துக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி
நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த "தமிழ்நாடு நிலம் கையெடுப்புச் சட்டங்கள் செயலாக்கம், திருத்தம், மதிப்பீடு புத்துயிரூட்டல் சட்டம்- 2019' எனும் புதிய சட்டத்துக்கு
நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த "தமிழ்நாடு நிலம் கையெடுப்புச் சட்டங்கள் செயலாக்கம், திருத்தம், மதிப்பீடு புத்துயிரூட்டல் சட்டம்- 2019' எனும் புதிய சட்டத்துக்கு எதிரான ரிட் மனுக்களை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
அதில், இந்த 2019-ஆம் ஆண்டு சட்டத்தை இயற்றுவதற்கு தமிழ்நாடு மாநில சட்டப் பேரவை சட்டப்பூர்வ தகுதியைக் கொண்டிருந்ததாகவும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 254 பிரிவுடன் முரண்படவில்லை என்றும் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக 2015-ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அந்தச் சட்டத்தை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாக்கலான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த மனு மீதான விசாரணையின்போது, உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கவில்லை. மேலும், ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில் தற்போது நடைபெறும் திட்டங்கள் தொடர அனுமதி அளித்த நீதிபதிகள், அனைத்து உத்தரவுகளும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனக் கூறியிருந்தனர்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மோகன ராவ் மற்றும் 55 பேர் தரப்பில் கடந்த ஆண்டு "ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் "தமிழ்நாடு நிலம் கையெடுப்புச் சட்டங்கள் செயலாக்கம், திருத்தம், மதிப்பீடு புத்துயிரூட்டல் சட்டம் (38-ஆவது) 2019-ஐ தமிழக அரசு செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்தை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக 2015-இல், 105 (ஏ) என்ற சட்டப் பிரிவை சேர்த்து தமிழக அரசு கொண்டு வந்த "நியாயமான இழப்பீடு, வெளிப்படைத் தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு' என்ற சட்டத்தை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தமிழக அரசு அந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதில், உயர்நீதிமன்றத்தில் உத்தரவுக்கு தடைவிதிக்கப்படவில்லை. சில குறிப்பிட்ட பிரிவுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு நிலம் கையெடுப்பு சட்டங்கள் செயலாக்கம், திருத்தம், மதிப்பீடு சட்டம் (38-ஆவது) 2019-ஐ தமிழக அரசு செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது' என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது. உச்சநீதிமன்றத்தில் முன்பு நடைபெற்ற விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், "தமிழக அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்' என வாதிட்டிருந்தார்.
தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி "தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் அனுமதி அளித்திருப்பதால், அது சட்டப்படி முரண்படாது. மேலும், இது தமிழக அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் நீதிமன்றம் தலையிடவும் முடியாது. "தமிழ்நாடு நிலம் கையெடுப்புச் சட்டங்கள் செயலாக்கம், திருத்தம், மதிப்பீடு புத்துயிரூட்டல் சட்டம் (38-ஆவது) 2019 சட்டமானது மாநில அரசின் சுதந்திரமான சட்டமியற்றும் நடவடிக்கையாகும். மேலும், மாநில அரசு இதுதொடர்புடைய 3 சட்டங்களை உருவாக்க தனது சட்ட அதிகாரத்தைச் செயல்படுத்தியது. இந்த 3 சட்டங்களும் அரசமைப்புச் சட்டம் 254(2)-இன்கீழ் குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்றுள்ளன. இதனால், முரண்பாடுகள் ஏதும் நிகழவில்லை. 3 சட்டங்களை உயிர்ப்புக்கும் வகையில்தான் மாநில சட்டப்பேரவை 2019-ஆம் ஆண்டு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது' என்று வாதிட்டார். கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுக்களை தள்ளுபடி செய்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. அதில் நீதிபதிகள் தெரிவித்திருப்பதாவது:
இந்த வழக்கில் 26.9.2013-ஆம் தேதியிலிருந்து 2019-ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்ட வரையிலான கடந்த கால விவகாரங்கள் குறித்த வாதங்களை நாங்கள் பரிசீலிக்கும் போது, 2013-ஆம் ஆண்டு சட்டம் தற்போது செயல்பாட்டில் இல்லை. 2013-ஆம் ஆண்டு சட்டம், 27.9.2013-இல் செயல்பாட்டுக்கு வந்தபோது மாநிலச் சட்டங்கள் மீண்டும் விரும்பத்தகாததாகிவிட்டது. இதனால், இந்த மனு பராமரிக்கதக்கதல்ல. இந்த வழக்கைப் பொருத்தவரையில், 2019-ஆம் ஆண்டு சட்டம் முறையான சட்டப்பேரவை நடவடிக்கைகளாக இருக்கிறது. மேலும், இந்திய அரசமைப்பு சட்டத்தின் 254 பிரிவு மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புடன் ஒத்துப்போவதாக இருப்பதாகவும் கருதுகிறோம். இதனால், இதுதொடர்பான ரிட் மனுக்களை தள்ளுபடி செய்கிறோம் என தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.