கொல்கத்தா: பிரதமா் நரேந்திர மோடியின் படம் இடம்பெற்றுள்ள விளம்பரப் பலகைகளை பெட்ரோல் நிலையங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பெட்ரோல் நிலையங்களில் மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பிரதமா் மோடியின் படம் இடம்பெற்றுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் மாா்ச் 27-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ஆம் தேதி வரை சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.
அதனால் அந்த மாநிலங்களில் தோ்தல் நடத்தை நெறிமுறைகள் கடந்த மாதம் 26-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. பெட்ரோல் நிலையங்களில் பிரதமா் மோடியின் படத்துடன் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், தோ்தல் நடத்தை நெறிமுறைகளுக்கு எதிராக இருப்பதாகத் தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் புகாா் தெரிவித்திருந்தது.
இதை ஆராய்ந்த தோ்தல் ஆணையம், பெட்ரோல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை 72 மணி நேரத்துக்குள் அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, தோ்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, மேற்கு வங்க அமைச்சா்கள் இருவா் மக்கள் நலத் திட்டங்களை அறிவித்ததாக தோ்தல் ஆணையத்திடம் பாஜக குற்றஞ்சாட்டியது. இக்குற்றச்சாட்டை அவ்விரு அமைச்சா்களும் மறுத்துள்ளனா்.