முகப்பு
இந்தியா

ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதா: ஆம் ஆத்மி, காங். போராட்டம்

துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மத்திய அரசின் தில்லி தேசியத் தலைநகர் பிராந்திய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தலைநகர் தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:46 PM
பகிர்:


புது தில்லி: துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மத்திய அரசின் தில்லி தேசியத் தலைநகர் பிராந்திய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தலைநகர் தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகியவை தனித்தனியாக புதன்கிழமை போராட்டம் நடத்தின.
தில்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வகை செய்யும், தில்லி தேசியத் தலைநகர பிராந்திய திருத்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தது. தில்லி துணைநிலை ஆளுநரின் சில குறிப்பிட்ட செயல்பாடு, அதிகாரங்களை வரையறுக்கும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மசோதாவுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் முதல்வர் கேஜரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் ராஜேந்திரபால் கெüதம் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் தர்னா: இதேபோன்று, ஜந்தர் மந்தரில் தில்லி காங்கிரஸ் சார்பில் தர்னா நடைபெற்றது. தில்லி காங்கிரஸ் தலைவர் அனில் குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் எம்.பி. கிருஷ்ண தீரத், தில்லி காங்கிரஸ் துணைத் தலைவர்கள் ஜெய் கிஷண், அபிஷேக் தத், அலி மெஹ்ந்தி, தில்லி மகிளா காங்கிரஸ் தலைவர் அம்ரிதா தவண், முன்னாள் எம்எல்ஏக்கள் அனில் பரத்வாஜ், அல்கா லம்பா, விஜய் லோச்சவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தச் சட்டத் திருத்த மசோதா குறித்து அனில் குமார் பேசுகையில், "தில்லி மக்களின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில், இந்தச் சட்டத் திருத்த மசோதா உள்ளது. மேலும், மத்திய அரசின் கைப்பாவையாக தில்லி முதல்வரை மாற்றும் நோக்கில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. 
மக்கள் நலனில் கொண்டுள்ள அக்கறை காரணமாக இந்த மசோதாவில் உள்ள மறைமுகப் பிரிவுகளை காங்கிரஸ் மக்களிடம் அம்பலப்படுத்தும். துணைநிலை ஆளுநர் மூலம் தில்லி அரசை ரிமோட் கன்ட்ரோலில் மத்திய அரசு இயக்குவதற்கு இந்த மசோதா வழிவகுக்கும். இந்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால் மாபெரும் மக்கள் இயக்கத்தை தில்லி காங்கிரஸ் நடத்தும்' 
என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments