லூதியாணாவிலும் அமலுக்கு வந்தது இரவு நேரப் பொதுமுடக்கம்
கரோனா தொற்று தொடர்ந்து பரவுவதைத் தடுக்கும் வகையில் லூதியாணாவில் காலவரையின்றி இரவு நேரப் பொது முடக்கத்தை அந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கரோனா தொற்று தொடர்ந்து பரவுவதைத் தடுக்கும் வகையில் லூதியாணாவில் காலவரையின்றி இரவு நேரப் பொது முடக்கத்தை அந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அடுத்த உத்தரவு வரும் வரை இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை காலவரையற்ற பொது முடக்க உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கம், இரவு நேரங்களில் தேவையற்ற கூட்டம் கூடுவரை தவிர்க்கும் வகையில் இது அமல்படுத்தப்பட்டுள்ளதாக லூதியாணா துணை ஆணையர் வருந்தர் சர்மா தெரிவித்தார்.
கடந்த இரண்டு வாரங்களாக வைரஸ் தொற்று எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. முன்னதாக 4000 சோதனைகளில் ஒரு சதவீதம் நேர்மறையாகவும், தற்போது 5-6 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மேலும், சராசரியாக இறப்பு எண்ணிக்கை வாரத்திற்கு ஏழாக இருந்தது. தற்போது 25-30 வரை எட்டியுள்ளது.
மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மேலும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது என்று சர்மா தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். கரோனா தடுப்பூசியைக் கட்டாயம் அனைவரும் செலுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,726 புதிய தொற்றும், 20,654 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 154 இறப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.