முகப்பு
இந்தியா

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி: விவசாயி மருத்துவமனையில் அனுமதி

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்ற விவசாயி அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:53 PM
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி
பகிர்:

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்ற விவசாயி அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் செவ்வாய்க்கிழமை நண்பகல் 1 மணியளவில் வந்த நபர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீக்குளிக்க முயற்சி செய்தார். இதையறிந்து அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர் விரைந்து சென்று அவர் கையிலிருந்த கேனை கைப்பற்றி உடலில் தண்ணீரை ஊற்றினர்.

அதன்பின்னர் மேற்கொண்ட விசாரணையில் திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் சண்முகசிவா(55) என்பது தெரியவந்தது. இந்நிலையில், விவசாயியான இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் இவரது உறவினர்களுக்கும் கடந்த 17 ஆண்டுகளாக சொத்து தகராறு உள்ளதாம். இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லையாம்.

எனவே சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி. மதுசூதன் ரெட்டியிடம் செவ்வாய்க்கிழமை புகார் அளிக்க வந்த நிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →