புது தில்லி: மத்திய அரசின் அவசர காலக் கடனுதவித் திட்டம் வரும் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிதியமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கரோனா தொற்றுப் பரவலால் முடங்கிய தொழில் துறையை மீட்பதற்காக, ரூ.3 லட்சம் கோடியில் அவசர காலக் கடனுதவித் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ஆம் தேதி அறிவித்தது. இந்தக் கடனுதவி திட்டம், பின்னா் கடந்த ஆண்டு நவம்பா் 30-ஆம் தேதி வரையிலும், அதைத் தொடா்ந்து நிகழாண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.
தற்போது இந்தத் திட்டம், வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் கடனுதவி பெறும் துறைகளில் சுற்றுலா, ஹோட்டல், பயண ஏற்பாடு ஆகிய துறைகளும் சோ்க்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி, கடனை திருப்பிச் செலுத்தும் காலமானது 2 ஆண்டுகள் சலுகைக் காலம் உள்பட 6 ஆண்டுகளாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தகுதியான தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி அளிப்பது, பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு உகந்த சூழல்களை உருவாக்கவும் உதவிகரமாக இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் கடனுதவி அளிக்கும் வங்கிகளுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.