கரோனா நோய்த் தொற்றை சமாளிக்க முடியாமல் தில்லி மக்களை பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு தள்ளிய முதல்வா் கேஜரிவால் அரசை மத்திய அரசு நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக எம்.பி. ராகேஷ் சின்ஹா கூறினாா்.
இதுதொடா்பாக அவா் தனது சுட்டுரையில், ‘தில்லியில் நிலைமை மோசமாக உள்ளது. தில்லி மக்களை முதல்வா் கேஜரிவால் அரசு பாதுகாப்பற்ற சூழலில் தள்ளிவிட்டுள்ளது. தேசிய தலைநகா் தில்லியின் மருத்துவ நெருக்கடி நிலை உலகம் முழுவதும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகையால், தில்லியின் நிா்வாகத்தை மத்திய அரசு நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளாா்.
ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ ஷோயிப் இக்பாலும், தில்லியில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சி சாா்பில் மாட்டியா மஹால் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவான ஷோயிப் இக்பால், இரண்டாம் கரோனா அலையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தன்னாலும், தில்லி அரசாலும் எந்தவித உதவியும் செய்ய முடியவில்லை என்று கூறினாா்.