புது தில்லி: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
கரோனா பேரிடருக்கு எதிரானப் போரில் மருத்துவப் பணியாளர்களை அதிகரிக்கும் பல்வேறு முடிவுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அனுமதி வழங்கியுள்ளார்.
அதன்படி, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 100 நாள்கள் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்களுக்கு, மத்திய அரசின் நிரந்தர பணி வாய்ப்பின் போது முன்னுரிமை அளிக்கப்படும். மருத்துவப் பயிற்சியாளர்கள், அவர்களது பேராசிரியர்களின் கண்காணிப்பின் கீழ், கரோனா மேலாண்மைப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
எம்பிபிஎஸ் இறதியாண்டு பயிலும் மாணவர்கள், லேசான தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு தொலைத்தொடர்பு வாயிலாக ஆலோசனை வழங்குவது அல்லது கரோனா நோயாளிகளை கண்காணிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுத்தவும், தகுதிவாய்ந்த செவிலியரகள், முழு நேர கரோனா பணியில், அவர்களது மூத்த செவிலியர்கள் அல்லது மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் பணியாற்ற அனுமதிக்கலாம் என்றும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், 100 நாள்கள் கரோனா முன்களப் பணியாற்றும் மருத்துவத் துறையினருக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் பெருமைக்குரிய கரோனா தேசிய சேவை சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.