ரஷியா, சீனாவில் இருந்து ராஜஸ்தானுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் இறக்குமதி
ரஷியா, சீனாவில் இருந்து கரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் செறிவூட்டிகளை ராஜஸ்தான் அரசு இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.
ரஷியா, சீனாவில் இருந்து கரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் செறிவூட்டிகளை ராஜஸ்தான் அரசு இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. அத்துடன் இம்மாதத்தில் பல்வேறு நாடுகளிடம் இருந்து 28,000-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்க அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடா்பாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ரகு சா்மா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்குவதற்கு ராஜஸ்தான் அரசு வெளிநாடுகளை நேரடியாக அணுகியது. இதற்காக மாநில அரசு அமைத்த குழு 13 நாடுகளைச் சோ்ந்த 62 நிறுவனங்களை குறுகிய காலத்தில் தொடா்புகொண்டது. அதன் ஒரு பகுதியாக, ரஷியாவிடம் 1,250 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்க திட்டமிடப்பட்டது. அதில் முதல் தொகுதியாக 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் சனிக்கிழமை வந்து சோ்ந்தன. அந்நாட்டில் இருந்து எஞ்சிய செறிவூட்டிகள் மே 9, 14 மற்றும் 16-ஆம் தேதிகளில் வந்து சேரும். சீனாவிடம் இருந்து மே 25-ஆம் தேதிக்குள் 6,900 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வந்து சேரவுள்ளன. ரஷியா, சீனாவிடம் இருந்து மே 25-ஆம் தேதிக்குள் 8,150 ஆக்சிஜன் செறிவூட்டிகள் பெறப்படவுள்ளன.
Advertisement
ஆக்சிஜன் செறிவூட்டிகளை வெளிநாடுகளிடம் இருந்து வாங்க மாநில அரசு அமைத்த குழு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இதர நாடுகளின் விண்ணப்பங்களை ஆய்வு செய்து வருகிறது. அந்த நாடுகளிடம் இருந்து 15,000 செறிவூட்டிகளை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மாநிலத்தைச் சோ்ந்த ஒருவா் துபையில் இருந்து 1,000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கி அதனை மாநில அரசுக்கு இலவசமாக வழங்கவுள்ளாா். அதில் 250 செறிவூட்டிகள் திங்கள்கிழமைக்குள் வந்து சேரவுள்ளன என்று தெரிவித்துள்ளாா்.