முகப்பு
இந்தியா

இந்தியாவில் 2 கோடியைத் தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை

நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்று 2 கோடியைத் தாண்டியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
பகிர்:

நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்று 2 கோடியைத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்று 2 கோடியைக் (2,00,79,599) கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில், 3,44,776 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 4 நாள்களில், 3ஆவது முறையாக, தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கையைவிட, குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாட்டில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 37,04,893 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் 5,632 பேர் குறைந்துள்ளனர். பல நாடுகளில் இருந்து நன்கொடையாக வரும் கரோனா நிவாரண மருத்துவப் பொருட்களை, மாநிலங்களுக்கு மத்திய அரசு விரைவாக ஒதுக்கீடு செய்து வருகிறது.

இதுவரை மொத்தம் 9,294 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 11,835 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 19 ஆக்ஸிஜன் உற்பத்தி கருவிகள், 6,439 வென்டிலேட்டர்கள் மற்றும் சுமார் 4.22 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் ஆகியவை சாலை மார்க்கமாகவும், வான் வழியாகவும் அனுப்பப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 18 கோடியை நெருங்குகிறது. 

இன்று காலை 7 மணி வரை, மொத்தம் 17,92,98,584, தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 3,43,144 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 72.37 சதவீதம் பேர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தேசிய உயிரிழப்பு வீதம் தற்போது 1.09 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,000 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.