ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரை
ஈரானை கடுமையாகத் தாக்குவோம்; இலக்கை நெருங்கிவிட்டோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதைப் பற்றி...
ஈரானுக்கு எதிரான போரில் இலக்கை நெருங்கி விட்டதாகவும், இன்னும் கடுமையாக ஈரானைத் தாக்குவோம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் நாட்டு மக்களுக்கு புதன்கிழமை இரவு (இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலை) உரையாற்றினார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் உரையாற்றி பேசுகையில், “ஆபரேஷன் எபிக் ஃபியூரியின் நடவடிக்கைகள் குறித்து ஆரம்பத்தில் இருந்தே நமது இலக்குகள் முழுமயாக நிறைவேறும் என்று கூறி வந்தோம். ஆனால், நாம் அதிரடித் தாக்குதல்களால், இந்தப் போரில் மிக வேகமாக முன்னேறியிருக்கிறோம். அமெரிக்க ராணுவ நடவடிக்கைகள் முக்கிய இலக்குகளை அடையும் நிலையில் உள்ளன. ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் தாக்குதல்கள் மேலும் தொடரும்.
நாங்கள் இந்த போரை இன்னும் வேகமாக முடிப்போம். கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிவிட்டோம். அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய் வாங்குங்கள். சௌதி அரேபியாவைவிட அதிகளவில் உற்பத்தி செய்கிறோம். நீங்கள் எங்களிடம் இருந்து எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம். ஈரானுக்கு எதிரான போரில் எங்களுக்கு ஆதரவளித்த மத்திய கிழக்கில் உள்ள சௌதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு நன்றி. எந்த அதிபரும் செய்யாததை நான் செய்தேன். ஈரானின் அணுஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டேன்.
Advertisement
Advertisement
ஈரானின் விமானப்படை, கடற்படை ஆகியவை அழிக்கப்பட்டுவிட்டன. அந்த நாட்டின் உயர் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர். நான் பேசிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், இஸ்லாமிய புரட்சிக்கர காவல்படையினரின் ஆளில்லா விமானங்கள், ஏவுகணை தயாரிக்கும் தொழிற்சாலைகளை தாக்கி தரைமட்டமாக்கப்பட்டுவிட்டன.
நமது எதிரிகள் தோல்வியடைந்து கொண்டிருக்கின்றனர். முன்னெப்போதும் இல்லாத வகையில், என்னுடைய ஆட்சிக்காலத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவை பயமுறுத்தவோ, அமெரிக்காவின் எல்லைகளுக்கு வெளியே தங்களது வலிமையைக் காட்ட நினைத்தாலோ அவர்களின் ஆட்சியை முறைப்படி முடிவு கட்டுவதை அமெரிக்கா நோக்கமாகக் கொண்டுள்ளது.
எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாவிட்டால், அமெரிக்கா ஈரானின் மின்சார உள்கட்டமைப்புகளைத் தாக்கும். ஈரானுக்கு ஆட்சி மாற்றம் தேவையில்லை. அது எங்கள் நோக்கமும் இல்லை. ஆனால், பெரிய தலைவர்கள் கொல்லப்பட்டதால் ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
முதலாம் உலகப் போரில் அமெரிக்கா ஓராண்டு மற்றும் ஏழு மாதங்கள் 5 நாள்களும், இரண்டாம் உலகப் போரில் மூன்று ஆண்டுகள், எட்டு மாதங்கள் 25 நாள்களும், கொரியப் போரில் மூன்று ஆண்டுகள், ஒரு மாதம் மற்றும் இரண்டு நாள்களும் பங்கேற்றது.
அதேபோல், வியத்நாம் போரில் 19 ஆண்டுகள், 5 மாதங்கள், 29 நாள்களும், இராக்கில் 8 ஆண்டுகள் 8 மாதங்கள் 28 நாள்களும் பங்கேற்று போரிட்டது. ஈரானுக்கு எதிரான போரில் இதுவரை 32 நாள்கள் அமெரிக்கா பங்கேற்றிருக்கிறது. அந்த நாடு முற்றிலுமாக சிதைக்கப்பட்டுவிட்டது. இனி யாருக்கும் அச்சுறுத்தலாக இருக்காது.
ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாக்க மற்ற நாடுகளும் அமெரிக்காவுக்கு துணையாக இருக்க வேண்டும். 2-3 வாரங்கள் ஈரானை கடுமையாகத் தாக்கப் போகிறோம். அவர்களை ஆயுதங்கள் எதுவுமில்லாத கற்காலத்திற்கு மீண்டும் கொண்டுச் செல்லப்போகிறோம். ஈரான் போரில் இஸ்ரேலோ, மத்திய கிழக்கில் இருக்கும் எங்களது நட்பு நாடுகளோ போரில் தோல்வியடைவதை அமெரிக்க பார்த்துக் கொண்டு இருக்காது” என்றார்.
அணுஆயுதக் கொள்கையைக் கைவிடக் கோரி, ஜெனீவாவில் நடைபெற்ற ஈரான் - அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், கடந்த பிப். 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவங்கள் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலில் உச்சத்தலைவரும், ஈரானின் மதகுருவுமான அலி அயத்துல்லா கமேனி, அவரது குடும்பத்தினர், ராணுவ உயரதிகாரிகள் 50 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கு ஆதரவளுக்கும் வளைகுடா நாடுகள் மீதும், இஸ்ரேல் மீது ஈரான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அதனொரு பகுதியாக உலக வர்த்தகத்தில் மிகவும் முக்கிய கடல்வழிப் பாதையான ஈரானுக்கு அருகில் உள்ள ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், பலவேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 5-வது வாரமாக போர் தொடர்ந்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் கடும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
In his first address to the nation since launching strikes on Iran four weeks ago, US President Donald Trump on Thursday said Washington is on the "verge of completing its core war objectives".
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.