புவனேஸ்வரம்: யாஸ் புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடியிடம், ஒடிசா சார்பில் எந்த நிவாரண உதவியும் கோரப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், பேரிடர்களை சமாளிக்கும் உள்கட்டமைப்புகளை உருவாக்கிக் கொடுக்கவும், கடலோரப் படையின் பலத்தை அதிகரிக்கவும், ஒடிசாவுக்கு அதிதீவிர புயல்களையும் எதிர்கொள்ளும் திறனையும் ஏற்படுத்திக் கொடுக்கவும் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து நவீன் பட்நாயக் தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது, கரோனா பெருந்தொற்று நாட்டில் தீவிரமடைந்துள்ளது. எனவே, தற்போதைய சூழ்நிலையில் நாங்கள் உடனடியாக எந்த நிதியுதவியையும் மத்திய அரசிடம் கோரவில்லை. இது மத்திய அரசுக்கு மேலும் நிதிச்சுமையை ஏற்படுத்தும். எனவே, தற்போது எங்கள் மாநிலத்துக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை, சொந்த வளங்கள் கொண்டே சரி செய்து கொள்வது என்று முடிவெடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.