கர்நாடகத்தில் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்துவது குறித்து ஜூன் 4 அல்லது 5-ம் தேதி முடிவு செய்யப்படும் என முதல்வர் எடியூரப்பா திங்கள்கிழமை தெரிவித்தார்.
கர்நாடகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்ததையடுத்து, கடந்த மே 10 முதல் மே 24 வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. தொற்று பாதிப்பு எண்ணிக்கைகள் மேலும் அதிகரித்ததால் பொது முடக்கம் ஜூன் 7 வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜூன் 7-க்குப் பிறகான பொது முடக்க முடிவு குறித்து முதல்வர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறியது:
"ஜூன் 4 அல்லது 5-ம் தேதி நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவேன். அப்போது நிலவும் கரோனா சூழலயையும் கருத்தில் கொண்டு பின்னர் முடிவு செய்யப்படும்" என்றார் அவர்.
இதனிடையே, செவிலியர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடியது குறித்து அவர் பேசுகையில், "6, 7 மாவட்டங்களில் செவிலியர்களுடன் கலந்துரையாடினேன். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அறிந்துகொள்ள முயற்சித்தேன். சிலர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வந்து மீண்டும் பணியாற்றுகின்றனர். சிலர் குடும்பத்தினர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டபோதிலும் வந்து பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு நன்றி கூற வார்த்தை இல்லை" என்றார் எடியூரப்பா.