இ-ஷ்ரம் கார்டுக்கு ரூ. 100 செலுத்தியதாக புகாரளித்த பெண்; கோபமாக வெளியேறிய அமைச்சர்?
அரசு நிகழ்வில் பெண் ஒருவர் புகார் அளித்ததால் மத்திய அமைச்சர் அதிருப்தியில் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு நிகழ்வில் பெண் ஒருவர் புகார் அளித்ததால் மத்திய அமைச்சர் அதிருப்தியில் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதாா் அட்டையுடன் இணைக்கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளா்களின் தேசிய அளவிலான தரவுத்தளம் (டேட்டா பேஸ்) ஒன்றை உருவாக்க மத்திய அரசு ‘இ-ஷ்ரம்’ என்கிற இணையதள சேவையை அறிமுகப்படுத்தியது.
சமூக பாதுகாப்புத் திட்டங்களின் பயன்களை தொழிலாளர்கள் அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கில் நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தவும் ‘இ-ஷ்ரம்’ இணையதளத்தில் தொழிலார்களின் விவரம் பதிவேற்றப்பட்டு கார்டு வழங்கப்படும்.
இந்நிலையில், தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் கார்டுகளை வழங்கும் நிகழ்வு பிகார் மாநிலம் பாட்னாவில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் ராமேஸ்வர் டெலி கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு கார்டுகளை வழங்கினார்.
அப்போது, கார்டுகள் இலவசமாக வழங்கப்பட்டனவா? என்று அமைச்சர் கேட்டதற்கு ரூ. 100 செலுத்தியதாக முகம்மதுபூர் பகுதியைச் சேர்ந்த கிரண் தேவி என்ற பெண்மணி தெரிவித்துள்ளார்.
கார்டுகளை அச்சடித்து வழங்குவதற்கு மத்திய அரசு, குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ரூ. 20 வழங்குகிறது. தொழிலாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்றே மத்திய அரசு கூறியிருந்த நிலையில், பெண்மணி கூறியது கேட்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர் உடனடியாக இதுகுறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அமைச்சர் கோபமாக அதிருப்தியில் அங்கிருந்து கிளம்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.