மத்திய வரிப் பகிர்வு இரட்டிப்புத் தவணையில் தமிழகத்துக்கு ரூ.3,878 கோடி விடுவிப்பு: 28 மாநிலங்களுக்கு ரூ.95,082 கோடி
மாநிலங்களுக்கு அளிக்கப்படும் மாதாந்திர வரிப் பகிர்வில், நவம்பர் மாதத்தில் இரண்டு தவணை நிதியாக 28 மாநிலங்களுக்கு ரூ.95,082 கோடியை மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை விடுவித்துள்ளது.
மாநிலங்களுக்கு அளிக்கப்படும் மாதாந்திர வரிப் பகிர்வில், நவம்பர் மாதத்தில் இரண்டு தவணை நிதியாக 28 மாநிலங்களுக்கு ரூ.95,082 கோடியை மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை விடுவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு ரூ.3,878.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வசூலிக்கும் மொத்த வரி வருவாயில் 41 சதவீதம் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதை 14 மாத தவணைகளாக பிரித்து அளிக்கப்படுகிறது.
கடந்த நவம்பர் 15-ஆம் தேதி மாநில முதல்வர்கள், நிதியமைச்சர்கள் மாநாட்டுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "அனைத்து மாநிலங்களும் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், நவம்பர் 22- ஆம் தேதி வழங்கப்படும் தவணையான ரூ.47,541 கோடியில் மேலும் ஒரு தவணையைச் சேர்த்து இரட்டிப்பாக ரூ.95,082 கோடியை மாநிலங்களுக்கு வழங்க மத்திய நிதித் துறை செயலர் டி.வி.சோமநாதனை நான் கேட்டுக் கொண்டுள்ளேன்' என்றார்.
மாநிலங்கள் வசம் கூடுதலாக நிதி இருக்கும் பட்சத்தில், அவர்களால் உள்கட்டமைப்பு உருவாக்கத்திற்காக செலவிடுவது குறித்து பரிசீலிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பின்படி, தமிழகம் உள்ளிட்ட 28 மாநிலங்களுக்கு நவம்பர் 22-ஆம் தேதி ரூ.95,082 கோடியை வரிப் பகிர்வாக மத்திய நிதித்துறை அமைச்சகம் விடுவித்துள்ளது. இதன் மூலம், மாநிலங்கள் உள்கட்டமைப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கான மூலதனச் செலவினங்களுக்கு இந்த நிதியைப் பயன்படுத்தும் போது, முதலீடுகளும் வர்த்தக நடவடிக்கைகளும் அதிகரித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்பது மத்திய அரசின் எதிர்பார்ப்பாகும். இந்த இரட்டிப்புத் தவணையில் தமிழகத்திற்கு ரூ. 3,878.38 கோடி கிடைத்துள்ளது.
இதில் அதிக நிதி பெற்ற மாநிலங்கள் வரிசையில் உத்தர பிரதேசம் (ரூ.17,056 கோடி), பிகார் (ரூ. 9,563.30 கோடி), மத்தியப் பிரதேசம் (ரூ.7,463.92). மேற்கு வங்கம் (ரூ.7,152.96), மகாராஷ்டிரம் (ரூ.6,006), ராஜஸ்தான்(5,729.64), ஒடிஸா (ரூ.4,305), ஆந்திரம் (ரூ.3,847.96) ஆகியவை இடம் பெற்றுள்ளன.