சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்கான மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம், மிகப் பெரிய திருப்பமாக, மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். அதுமட்டுமின்றி, தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்லுமாறு போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கோரிக்கை விடுத்தார்.
அப்போது, "இந்த மாத இறுதியில் தொடங்கப்படும் நாடாளுமன்ற கூட்டத்தில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான நடைமுறைகள் முழுவதுமாக நிறைவேற்றப்படும்" என்றார்.
சட்டத்தை ஆதரித்து பேசிய அவர், "சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கான சீர்திருத்தும் இது. விவசாயிகளுக்காகவே இதை சட்டத்தை நிறைவேற்றினேன். தற்போது, அவர்களுக்காகவே இதை திரும்ப பெறுகிறேன்" என்றார்.
தில்லியின் எல்லை பகுதிகளில், கடந்த ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் போராடிவருகின்றனர். விவசாயிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகைத், "நவம்பர் 29ஆம் தேதி தொடங்கப்படவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், இந்த சட்டங்கள் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் காத்து கொண்டிருப்பார்கள்" என்றார்.
இதையும் படிக்க | பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்
இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில், "கடந்த காலத்தில், இம்மாதிரியான பொய் வாக்குறுதிகளால் பாதிக்கப்பட்ட மக்கள், வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்ற பிரதமரின் வார்த்தைகளை நம்ப தயாராக இல்லை" என்றார்.